நாகர்கோவில் புத்தேரி பகுதியைச் சேர்ந்த மேடை பாடகியான கோபிகா தனது கணவர் மீது புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
நாகர்கோவில் அருகே ஸ்டீபன் என்பவர் இசைக்குழு நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது இசைக்குழுவில் பாடுவதற்காக மேடை பாடகியான கோபிகாவை ஸ்டீபன் அழைத்திருக்கிறார். நிகழ்ச்சியை முடித்த பின்பு கோபிகாவை ஒரு விடுதியில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக தாலி கட்டியிருக்கிறார் ஸ்டீபன். அதனால் ஸ்டீபனோடு விருப்பம் இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறார் கோபிகா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருமணம் ஆன சில நாட்களிலேயே ஸ்டீபனின் உண்மை முகம் கோபிகாவிற்கு தெரியவந்துள்ளது. ஓய்வின்றி இசை நிகழ்ச்சிகளுக்கு பாட அழைத்துச் சென்றும், உணவு வழங்காமலும் கோபிகாவை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார் ஸ்டீபன். அந்த நேரத்தில்தான் ஸ்டீபனின் சகோதரி மூலம் ஸ்டீபனுக்கு ஏற்கனவே ஒரு கேரள பெண்ணுடன் திருமணம் ஆனது தெரியவந்திருக்கிறது. அந்த பெண்ணையும் ஸ்டீபன் அடித்து துன்புறுத்தி கொடுமை படுத்தியதால், ஸ்டீபனை விட்டு பிரிந்து சென்ற அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது.
தான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நேரத்திலும் தன்னை அறைக்குள் வைத்து ஸ்டீபன் துன்புறுத்தியதாக கூறும் கோபிகா தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த நேரத்தில் பல பெண்களுடன் வயது வித்யாசம் இல்லாமல் பழக்கம் வைத்துக்கொண்ட ஸ்டீபன், அவர்களை ஸ்டூடியோவிலும், பெரிய மேடைகளிலும் பாட வைக்கிறேன் என்று ஆசை காட்டியத்தோடு திருமணம் செய்துகொள்வதாகவும் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வந்திருக்கிறார்.
கோபிகா வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த அப்பாவி பெண்களை தனித்தனியாக வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அறையில் தனியாக இருந்த போது எடுத்துக்கொண்ட ஆபாச படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்தே நகை பணத்தையும் பறித்து வந்திருக்கிறார் ஸ்டீபன். இந்த கொடுமைகள் அனைத்தும் ஸ்டீபனின் பெற்றோருக்கு தெரிந்தே நடப்பதாக கோபிகா குற்றம் சாட்டுகிறார்.
இதற்கிடையே கோபிகாவை தன்னுடன் நீ வரவில்லை என்றால் உன்னையும் உனது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் ஸ்டீபன். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது பெண் குழந்தையுடன் சென்ற கோபிகா, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்துள்ளார்.
ஸ்டீபனிடம் மாட்டிக்கொண்ட அப்பாவி பெண்களை மீட்க வேண்டும் எனவும் ஸ்டீபனுக்கு உரிய தண்டனை கொடுக்குமாறும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.