தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக தங்களுடைய கூட்டணியை உறுதிப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று திமுக, கூட்டணியிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது. இரு கட்சியினரும் தொகுதி உடன்படுக்கையில் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து திருமாவளவன் நியூஸ் 7 தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்திருந்தார். அதில்…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“இதுவரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணியில் இடம்பெறவில்லை. வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணியில் முதன் முறையாக இணைந்துள்ளோம். இந்த கூட்டணியில் பெற்ற 6 தொகுதி 12 தொகுதிகளுக்கு சமம்.”
“திமுக கூட்டணி வெற்றி பெறும் என புள்ளி விவரங்கள் கூறி வருகிறது அதிமுக மீது மக்கள் அதிருப்தி மனநிலை உள்ளனர். மேலும், பாஜக கூட்டணியால் அதிமுகவிற்கு பலவீனமான சூழல் நிலவிவருகிறது. சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகள் அதிமுக கூட்டணியில் உள்ளது.” என கூறியுள்ளார். மேலும்,
“கூடுதல் தொகுதி பெற முயற்சித்தோம், 10 தொகுதி கேட்டோம், திமுக தரப்பு நெருக்கடியை சொன்னார்கள், தோழமையோடு வேண்டுகோள் வைத்தார்கள். மதசார்பற்ற சக்திகளின் வாக்கு சிதறிவிடக் கூடாது, எண்ணிக்கையை வைத்து கூட்டணியை சிதறடிக்க கூடாது என இந்த முடிவெடித்துள்ளோம். கட்சி நிர்வாகிகள், களப்பணியாளர்களுக்கு இந்த எண்ணிக்கையில் மனநிறைவு இல்லை என்பது உண்மை, ஆனால் கூட்டணியை முறித்துக் கொண்டு, அதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்த்து விடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுள்ளோம்.” என தொகுதி உடன்படிக்கை நிலவரத்தை விவரித்துள்ளார்.
“போட்டியிடும் தொகுதி குறித்து முடிவு செய்யவில்லை. இரண்டொரு நாளில் பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்வோம். சின்னம் பெரிய பிரச்சனையாக பார்க்கவில்லை. சமூக வலைதளம் வலிமையாக உள்ளது சின்னம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் அது மக்களிடம் சென்று சேர்ந்துவிடும். மிகவும் பிரபலமடைந்த சின்னங்கள் கூட தோல்வியை தழுவி உள்ளது. நிலையான சின்னம் இருந்தால்தான் வெற்றி பெறுவோம் என்ற கருத்து மாயை. புதிய சின்னம் வெற்றிக்கு பயன்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்,
சசிகலா விலகல் அதிமுகவிற்கு பலம் சேர்த்துள்ளது எனக்கூறிய திருமாவளவன், இது திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, “அதிமுக மற்றும் அமமுக இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. இது திமுக கூட்டணிக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாது. திமுக கூட்டணிக்கு மக்களிடம் நன் மதிப்பு கூடி இருக்கிறது. இந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.” என்றும் தெரிவித்துள்ளார்.