திமுகவை அச்சுறுத்துவதற்காகவே, எனது மகள் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டதாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, மு.க.ஸ்டாலின் ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது வெளியாகி வரும் கருத்துக்கணிப்புக்கள் ஆளுங்கட்சியிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு தக்க பதிலடி தர மக்கள் தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
திமுகவினரை அச்சுறுத்தி, தேர்தலில் வெற்றி பெறலாம் என பாஜக முயற்சி செய்வதாகவும், வருமான வரி சோதனைகளைக் காட்டி, திமுகவை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. திமுகவை அச்சுறுத்தவே என் மகள் வீட்டில் வருமான வரி துறை சார்பில் சோதனை நடைபெற்றது. சோதனை செய்ய வந்தவர்கள் டீ, குடித்துவிட்டு, தொலைக்காட்சி பார்த்துவிட்டு பிறகு பிரியாணி சாப்பிட்டுவிட்ட சென்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற கடந்த 20 நாட்களாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறேன். இதற்காக தற்போதுவரை 12-ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளேன். இந்த பயணத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் அடைந்த வேதனைகளை மறைக்க அதிமுக அரசு முயற்சிப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.