திமுகவின் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்களை செய்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
‘2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி 43-இல், விவசாயிகளுக்கு எதிரான சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது. வாக்குறுதி 367-இல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்படமாட்டாது. என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வாக்குறுதி 500-ல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன்:
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ பொறுத்தவரை, அதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்ததோடு மட்டுமின்றி, நானே வீதிகளில் இறங்கி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் திமுக கொடுத்திருக்கிறது.
அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்குக் திமுக அழுத்தமான குரல் கொடுக்கும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement: