மே மாதத்தின் மத்தியில் கொரோனா தாக்கம் அதிகரித்து மோசமான நிலை வந்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியின் பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு தொகுப்பில் இருந்து இன்னும் முழுமையாக ஆக்ஸிஜன் சப்ளை கிடைக்கவில்லை என டெல்லி அரசு தெரிவித்தது. ஆக்சிஜன் அளவை 480 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குவதாக கூறிய நிலையில், 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் குறைவாகவே கிடைக்கிறது எனவும் குறிப்பிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு உறுதியளித்த வகையில், டெல்லிக்கு தேவையான 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எப்போது எந்த தேதியில் வந்து சேரும்? குறிப்பிட்ட தேதியை கூறுங்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஆக்சிஜன் வழங்குவது தொடர்பாக அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருகின்றன, எனவே அதன் தற்போதைய நிலையை உரிய துறையிடம் கேட்டு தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டது.
தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் மே மாத மத்தியில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி ஐஐடி கூறியுள்ளதாக பத்திரிகைகளில் வந்துள்ளது. அப்படி இருக்கும்போது அதை எப்படி சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் போகிறோம்? என மத்திய அரசிடம் வினவினர்.
அதற்கு மத்திய அரசு தரப்பு, “நீதிமன்றத்தின் இந்த வார்த்தைகளை கவனத்தில் கொள்வோம், எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கடவுளை வேண்டுகிறோம். ஒருவேளை மே மாதத்தின் மத்தியில் தாக்கம் அதிகரித்து மோசமான நிலைமை வந்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், இது எவரையும் அச்சுறுத்துவதற்காக கூறுவது அல்ல” என பதில் தெரிவித்தார்.