பெற்ற மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு இயற்கை மரணம் எய்தும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கன்னிராஜபுரம் பகுதியில் தேநீர் கடையில் மாஸ்டராக பணிபுரியும் மாரிமுத்து என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி மதுபோதையில் வந்த மாரிமுத்து, அவரது 10 வயது மற்றும் 12 வயது மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து பெற்ற மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால் மாரிமுத்து மீது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரு குழந்தைகளிடமும் நீதிபதி சுமித்ரா தனித்தனியாக விசாரணை நடத்தினார். பின்பு உண்மை நிலை அறிந்த நீதிபதி சுமித்ரா, தவறு செய்த குற்றவாளி மாரிமுத்துவுக்கு இயற்கை மரணம் எய்தும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் மாரிமுத்துவுக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் ஆணையிட்டார். மேலும், 2 பெண் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி சுமித்ரா பரிந்துரை செய்துள்ளார்.
Advertisement: