ஜல்லிகட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டியின் மீதான தடையை எதிர்த்து மதுரை அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் மற்றும் சென்னை மெரினா கடற்கரை என பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, காவல்துறையினரை தாக்கியது மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பான வழக்குகளை தவிர, மற்ற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து, நன்றி தெரிவித்துள்ளனர்.
Advertisement: