இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-க்கு2 என புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5-வது டி20 போட்டியின் கடைசி தொடர் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேப்டன் விராட்கோலி களம் இறங்கினர். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விராட்கோலியுடன் இணைந்த சூர்ய குமார் யாதவ் 17 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆவுட் ஆனார். இறுதியில் ஹர்திக் பாண்டியா தனது அனுபவத்தை வெளிப்படுத்தி 17 பந்துகளில் 39 ரன்களையும், கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 80 ரன்களையும் குவித்தனர். இதனையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது. இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜேசன்ராய் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நன்கு விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 34 பந்துகளில் 52 ரன்களும், டேவிட் மாலன், 46 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
ஆட்ட நாயகன் விருது வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு வழங்கப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-க்கு2 என புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய இந்திய அணிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.