எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ் நீயூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக,திமுக ஆகிய இரு பெரும் கட்சிகள், தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக தொகுதி பங்கீட்டை பெரும்பாலும் முடித்துள்ளது. இந்நிலையில் இந்த இரு கட்சிகளுக்கு எதிராக தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி மூன்றாவது அணியை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ் நீயூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“மக்களின் முதல் அணியாக நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளோம். எங்கள் கூட்டணி 120 இடங்களிலாவது வெற்றி பெறும். எங்கள் கூட்டணியில் இணைய பலரும் முன்வந்தனர் அதனால்தான் இந்த தாமதம், மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.
தேமுதிக எங்கள் அழைப்பை ஏற்று கொண்டு கூட்டணிக்கு வந்தால் மிகப்பெரிய மாற்றம் வரும். தேமுதிக வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் வாழ்த்துகிறோம். ஆட்சியை ருசி பார்த்து மக்களை வெறும் வாக்கு எந்திரமாக பார்க்கும் கழகங்கள் உடன்தான் கூட்டணி இல்லை என்றோம். அதிமுக, திமுக என்ற கழகங்களைதானே தவிர மற்ற கழகங்களை சொல்லவில்லை. தேமுதிகவோ மற்ற கட்சிகளோ எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் அனைவரும் பகிர்ந்து, அவர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை கொடுப்போம். சமக, ஐஜேகே எங்கள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் அவர்கள் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தால் நாங்கள் தடுக்கவில்லை.” என்று கூறியுள்ளார். மேலும்,
“கலைஞர் அளவிற்கு ஸ்டாலின் இல்லை என்பதைதான் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஸ்டாலினை தாக்கியோ அவமானப்படுத்தியோ பேசவில்லை. திமுக, அதிமுக மக்களுக்கான நம்பிக்கையை இழந்து விட்டது. இதை முன்னிறுத்தி தேர்தலை எதிர் கொள்வோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.