நாட்டில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டாகிறது. யுனெஸ்கோ அமைப்பு சமீபத்தில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் 2.40 கோடி குழந்தைகள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி இடைநிற்றலாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்த நோய்த்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்களின் வாழ்க்கை கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. கல்வி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தொடர்ந்து படிக்க இயலாத சூழல் முன்பைவிட அதிகரித்துள்ளது.
இதனால் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றுநோயால் உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டது. மேலும், மாணவர்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளது.
அதேபோல் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வில் உலகளவில் 15.2 கோடி குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 7 சதவீதமான குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாட்டில் ஒரு கோடி பேர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கூறுகையில் “ 2015-2016-ல் 8 சதவிகிதம் மாணவர்கள் இடைநிற்றல் ஆனதாகவும், 2017-2018 -ல் 16 சதவிகித மாணவர்கள் இடைநிற்றல் ஆனதாகவும் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை ஊரடங்கு காலத்தில் மேலும் அதிகரித்திருக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய குடும்பங்கள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் வறுமை நிலைக்கு மேலும் தள்ளப்பட்டனர். குடும்ப வறுமையின் காரணமாகப் பலர் அவர்களது படிப்பை நிறுத்திவிட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.
குழந்தைகள் உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி தலைமையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் நாட்டில் 20 சதவீத குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளை வேலை அனுப்பியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதேகாலாட்டத்தில் கேரள மாநிலத்தை பள்ளி இடைநிற்றல் எண்ணிக்கை 0.11 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 2019-2020 கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கேரள அரசு பள்ளிகளில் 6.79 லட்சம் மாணவர்கள் புதியதாகச் சேர்ந்துள்ளனர் என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.
திட்டமிடப்படாத ஊரடங்கு நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களின் திசையை மாற்றியுள்ளது என்பதே கொரோனா ஊரடங்கின் ஓராண்டு நினைவுபடுத்துகிறது.