வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்ததை குறிப்பிட்டார். விவசாயத்தை பெருக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ஏரிகளை தூர் வாரியதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு எந்தத் திட்டங்களையுமே நிறைவேற்றாத கட்சி திமுக என விமர்சித்தார்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் பரப்புரையின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னதாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.