கொரோனா தொற்றுக்கு பிறகு 2021-2022-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில் தமிழகத்திற்கு நான்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் தனது கருத்தினை அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
கொரோனா தொற்றுக்கெதிரான தடுப்பு பணிகளுக்காக நிதியுதவியை தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வேண்டும் என்றும், அதே போல சென்னை மீன்பிடி துறைமுகத்தினை மேம்படுத்துவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்று, மாநிலத்தின் இதர சிறிய மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
63,246 கோடியில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கான 50% நிதியை உடனடியாக வழங்கவும், தற்போதைய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் புதியதாக அமையப்பட உள்ள 7 ஜவுளி பூங்காக்களில் இரண்டு பூங்காக்கள் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்றும், மாநிலத்தில் நிதி நிறுவனத்தினை அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். நகர போக்குவரத்து கழகங்களுக்கு நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக போக்குவரத்து கழகத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இறுதியாக, தற்போது கலால் வரி குறைக்கப்பட்டு மேல் வரி உயர்தப்பட்டிருப்பதிற்கு தனது அதிருப்தியை முதல்வர் தெரிவித்துள்ளார்.