குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்தது தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், உரிமைக் குழு மீண்டும் கூடி, ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. 2வது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கினை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உரிமை குழு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்த நிலையில் அந்தத் தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நோட்டீஸில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு உரிமை குழு புதிய நோட்டீஸை வழங்கியுள்ளதாகவும், சபாநாயகரின் அனுமதியின்றி குட்கா பொருளை சட்டப்பேரவையில் காண்பித்தது அவை உரிமை மீறல் எனவும் மனுவில் கூறப்பட்டது.
திமுக தரப்பில், உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டு அது உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது சபாநாயகர் அனுமதி இல்லாமல் குட்கா கொண்டு வந்தார்கள் என பெயருக்கு திருத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று காலை 10.30 மணிக்கு குட்கா வழக்கில் காணொலி வாயிலாக தீர்ப்பு வழங்குகிறார்.
Advertisement: