2020ம் ஆண்டில் ஃபேஸ்புக்கில் அதிகம் பேசப்பட்ட செய்திகள், கருத்துகள் தொடர்பான தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை ஐகான், சமூக விழிப்புணர்வு, கோவிட்-19, அரசியல், சுற்றுச்சூழல், சமூகம் என ஆறு பகுதிகளாக பிரித்துள்ளனர். ஜனவரி 1, 2020 முதல் அக்டோபர் 31, 2020 வரை இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஐகான் பிரிவில் கோப் பிரையண்ட் இடம்பிடித்துள்ளார். பிரபல கூடைப்பந்து வீரரான அவர், கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். அதனால் அவரது வாழ்க்கை தொடர்பான செய்திகள் பேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்டுள்ளன. அமெரிக்கா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் இதுதொடர்பாக அதிகம் பதிவிட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமூக விழிப்புணர்வு பிரிவில், Black lives matter முதலிடம் பிடித்துள்ளது. கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட், அமெரிக்க போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கொரோனா பிரிவில், பிலிப்பைன்ஸ் மக்கள் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிக அளவில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இத்தாலி மக்கள் கொரோனா காலத்தில் பேஸ்புக் லைவ்வை அதிகம் பார்த்துள்ளனர். இந்த காலத்தில் மட்டும் லைவ் பார்ப்போர் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளது,
அரசியல் பிரிவில், அமெரிக்க அதிபர் தேர்தல் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதே அதிகம் பதிவிடப்பட்டுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 10 மில்லியன் பதிவுகள் இதுதொடர்பாக பதிவிடப்பட்டுள்ளன,
சுற்றுச்சூழல் பிரிவில், ஆஸ்திரேலிய காட்டுத்தீ இடம்பிடித்துள்ளது. பேஸ்புக் பதிவுகள் மூலம் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை திரட்டியுள்ளனர். இதுவரை திரட்டப்பட்ட நிதியிலேயே இதுதான் அதிகம் இருப்பதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
சமூகம் பிரிவின் கீழ், பேஸ்புக் நிறுவனம் தங்கள் பயனர்களை சிறு, குறு தொழில் நோக்கி அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமையும் இதனுடன் இணைந்து சிறிய தொழில்கள் அதிகம் வளர்க்கப்பட்டுள்ளது.