ராஜஸ்தானில் கோயில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பால் மற்றும் தயிரை ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர்.
ஜலாவர் மாவட்டத்தில் தேவநாராயண கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அங்கு நடந்த ஒரு நிகழ்வு தற்போது அனைவராலும் பேசப்படுகிறது. ஏனென்றால் கோயில் அடித்தளத்திற்காக தோண்டப்பட்ட குழியில் சுமார் 11,000 லிட்டர் பால், தயிர் மற்றும் நெய்யை ஊற்றி பூஜை செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மொத்தமாக உள்ள 11,000 லிட்டரில், 1500 லிட்டர் தயிர், 1 குவிண்டால் நெய் அடங்கும். மற்றவை அனைத்தும் பால் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக ரூ.1.50 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த காலத்தில் இருந்தே இருக்கிறதா என அப்பகுதி மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கட்டாயமாக இதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஓரிரு முறை இந்த முறை பின்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடவுள் தங்களுக்காக நிறைய செய்யும் போது, அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தாங்கள் செய்தது மிகக் குறைவு தான் என்றும் தெரிவித்துள்ளனர். கடவுள் கால்நடைகளை பாதுகாப்பதால், அவைகளிடம் இருந்து கிடைத்த பாலை அடிக்கல் நாட்டும் போது நிலத்தில் ஊற்றி நன்றி தெரிவித்ததாக கூறியுள்ளனர். இந்த கோயில் கட்டுமானப் பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கோயில் முறைப்படி திறக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.